Monday 21 July 2014

வேண்டியதை தரும் சின்னமாடன் குடியிருப்பு வேம்படி சுடலை ஆண்டவர்

வேண்டியதை தரும் சின்னமாடன் குடியிருப்பு
வேம்படி சுடலை ஆண்டவர்



சாத்தான்குளத்திலிருந்து நானும் எனது நண்பரும் ஏதேனும் செய்தி  சேகரிக்க கிளம்பி பேய்குளம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்தோம். தேனீர் அருந்தி சிறிது இளைப்பாரி விட்டு செல்லலாம் என்று முடிவு செய்தோம். வெயில்வேறு வாட்டி எடுத்தது. பேய்குளத்தில் இருந்து செல்லும் போது பழனியப்பபுரம் கடந்து சின்னமாடன் குடியிருப்பு செல்லும் மணல் சாலையில பயணித்த போது ஆள் நடமாட்டமே அங்கு காணவில்லை. 
அந்த இடத்தில் ஒரு குறிப்பிட்ட இடம் மட்டும் எங்கள் கண்களுக்கு பசுமையாக காணப்பட்டது. மிகவும் ஆச்சரியமாக இருந்தது. மிக உயர்ந்து வளர்ந்த ஆலமரம், சுற்றிலும் பசுமையாக தெரிந்த செடி கொடிகள் இவைகளை கண்டதும் எங்கள் மனதில் இங்கு ஏதேனும் தெய்வசக்தி இருக்கிறது என்று தோன்றியது. 
ஆள் நடமாட்டமே இல்லாத பகுதியாக இருப்பதால் இதுபற்றி யாரிடம் விசாரிப்பது என்று யோசனை செய்துக்கொண்டிருந்தபோது தூரத்தில் ஒரு பெரியவர் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தது எங்கள் கண்களுக்கு தென்பட்டது.  அவரிடம் நாங்கள் எப்படி பேச்சை தொடங்குவது என்று எண்ணிக்கொண்டு அவரிடம் தண்ணீர் தாகமாக இருக்கிறது இங்கு எங்கேனும் தண்ணீர் கிடைக்குமா என்று கேட்டோம். உடனே அவர் தன் கையில் வைத்திருந்த குடுவையை எங்களிடம் நீட்டினார். அதில் தண்ணீர் இருந்தது. நாங்கள் இருவரும் தாகம் தீர்த்துக்கொண்டோம். அவர் கொடுத்த அந்த நீர் மிகவும் சுவையாக இருந்தது. 
பின்பு அந்த பெரியவரிடம் இந்த இடத்தின் பசுமை பற்றி கேட்டோம். அதற்கு அவர் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு இந்தபகுதிக்கு பிழைப்பு தேடி ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வந்தார்கள். அவர்கள் இந்த மர நிழலில் ஓய்வெடுக்க தங்கினார்கள்.
அவர்கள் வரும் போது தங்கள் குலதெய்வமான ஸ்ரீவேம்படி சுடலை ஆண்டவரை  ஒரு குடுவையில் வைத்து கொண்டு வந்தார்கள். அந்த குடுவையுடன் ஒரு குத்து விளக்கும், சில மணிகளும், வைர, வைடூரியங்களும் தங்க நகைகளும் கொண்டு வந்தார்கள். (கல்லில் செய்த பெரிய குத்து விளக்கு அது) இவைகளையும் அந்த மரத்தடியில் வைத்து சிறிது நேரம் இளைப்பாறினார்கள். பின் அங்கிருந்து நகரும் வேளையில் குடுவையையும், கல்லால் ஆன குத்து விளக்கையும் எடுக்க முயற்சிக்கையில் அவை அங்கேயே நிலை பெற்றுவிட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த குடுவையும், கல்குத்துவிளக்கும், நவமணிகளும் அசையவில்லை-. மிகவும் மனம் வருந்தினார்கள்.
அப்போது அந்த மரத்தின் மேல் இருந்து ஒரு தெய்வக்குரல் கேட்டதாம் நீ இங்கிருந்து மூன்று கல் கிழக்கு நோக்கி செல் அங்கு உன் குடும்பத்தினர்களுடன் தங்கி இரு. நீ வசிக்கும் இடத்தில் எனக்கும் ஓர் கோயில் எழுப்பி என்னை வழிபடு. ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் எனக்கு இங்கு வந்து பொங்கல் வைத்து நீ வசிக்கும் இடத்திற்கு அழைத்து செல். நீயும் உன் சந்நதியும் நலமோடு வாழ்வீர்கள் என்று கேட்டது என பெரியவர் உருக்கமுடமன் சொன்னதை கேட்டதும் நமக்கு உடல் சிலிர்த்து விட்டது. மிகுந்த மகிழ்ச்சியோடு நாமும் அந்த மரத்திற்கு அடியில் சென்று பார்க்கலாமே என்று தோன்றியது. பெரியவரை அழைத்தோம். பெரியவர் சிரித்துக் கொண்டே நான் எப்போதும் இங்கேயே தானே அப்பா இருக்கிறேன் நீங்கள் சென்று பாருங்கள் நான் சொன்ன உண்மை தெரியும் என்று கூறினார். அவர் சுட்டி சாட்டிய ஊர்தான் சின்னமாடன் குடியிருப்பு என்பதை உறுதி செய்து கொண்டோம்.
நாங்கள் அருகில் சென்று மரத்தடியில் பார்த்தபோது, ஏதோ ஓர் மகிழ்ச்சியும், வாசனையும் வந்தது. அந்த மரத்தின் மீது சந்தனம், குங்குமம் இருந்தது. சில காய்ந்து போன மாலைகள் தொங்கி கொண்டு இருந்தன. பெரியவர் சொன்ன கல்குத்து விளக்கு மட்டும் அங்கே இன்றும் காணப்படுகிறது. அதை கண்டு மகிழ்ந்தோம். ஆனால் அவர் குறிப்பிட்ட குடுவை மட்டும் அங்கு இல்லை. அதுதான் பெரியவர் கையில் இருக்கும் குடுவை என்ற உணர்வு அப்போதுதான் எங்களுக்கு தென் பட்டது. கை கூப்பி சுடலை ஆண்டவரை வங்கி விட்டு பெரியவருக்கு நன்றி சொல்வோம் என்று பெரியவர் நின்ற திசையை நோக்கி பார்த்தால் பெரிய வரும் இல்லை. ஆடு, மாடுகளும் இல்லை. பக்தியுடனே...  சின்னமாடன் குடியிருப்பு நோக்கி பயணம் செய்தோம். 
சின்னமாடன் குடியிருப்பு சிறிய கிராமம் தான் ஆனாலும் அங்கு வீற்றிருந்து அருள் வழங்கும் ஸ்ரீவேம்படி சுடலை ஆண்டவரின் அருளோ மிகப்பெரியது.
இவரை சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். முன்பெல்லாம் மாட்டு வண்டியை பூட்டிக்கொண்டு குடும்பம் குடும்பமாக ஸ்ரீசுடலை ஆண்டர் கொடை விழாவை காண வருவார்களாம்.
முன்பு ஒருமுறை இவ்வாலயத்தில் அருள்வந்து ஆடிய பேயாண்டி நாடார் சுடுகாட்டுக்கு வேட்டைக்கு சென்றார். வேட்டை ஆடி வரும் போது ஒரு மனித எழும்பு கூட்டை தன் தோள் மீது சுமந்து கொண்டு கோயிலுக்கு வந்து விட்டாராம் இதை கண்ட ஊர்மக்கள் அலறி அடித்து அதிர்ச்சி அடைந்தனர். இதில் சில தைரியமான பெரியவர்கள் அருள் வந்து ஆடும் பேயாண்டி நாடாரை பார்த்து இது என்ன கூத்து இப்படி நடந்து கொண்டால் எப்படி கொடை நடத்துவது? நீங்கள் வந்த கோலத்தை பார்த்து எல்லோரும் பயப்படுகிறார்கள் என்று கேட்டனர். உடனே பேயாண்டி நாடார் ஆலயத்தில் போடப்பட்டிருந்த பந்தலுக்கு வெளி யில் வந்து வானை நோக்கி, இந்தாபிடி என்று உரக்க குரல் கொடுத்துவிட்டு  தன்தோள்மீது கிடந்த மனித எழும்பு கூட்டை வானத்தைநோக்கி வீசியுள்ளார். அது அப்படியே மறைந்து போனதாம். பின்பு ஊர் பெரியவர்கள் ஒன்று திரண்டு சுடலை ஆண்டியிடம் வேட்டைக்கு செல்ல கூடாது. அப்படி வேட்டைக்கு செல்லகூடாது. அப்படி வேட்டைக்கு செல்ல வேண்டும் என்று தீர்மானித்தால் ஊருக்கு வெளியே நீர் போய் அமர்ந்து கொள்ளும், நாங்கள் அங்கு வந்து கொடை கொடுத்து கொள்கிறோம் என்று வேண்டவே சுடலை  ஆண்டவர் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்து கொடுத்தாராம். அன்று முதல் இன்று வரை இங்கு வீற்றிருந்து அருள் பாலிக்கும் சுடலை ஆண்டவர் வேட்டைக்கு செல்வதில் லையாம். இந்த சுடலை ஆண்டவருக்கு தங்கத்தினால் ஆன வேலும், வாளும், ஏராளமான தங்க, வெள்ளி நகைகளும் இருந்ததாம்.
இவரிடம் வேண்டிகொண்டால் வேண்டுதல் உடனே நிறைவேறிவிடும். சுடலை ஆண்டவர் ஆலயத்தில் பூக்குழி இறங்குவது சிறப்பாகும். இதை காண பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அருள் வந்து ஆடுபவர்கள் பூக்குழியில் இறங்கி வந்து அருள்வாக்கு சொல்வார்கள் அப்போது சொல்லும் வாக்கு அப்படியே நடக்கிறது. 
பல ஊர்களில் சுடலைமாட சுவாமி கோயில் ஊருக்கு வெளியே கிழக்கு புறத்தில் தான் இருக்கும் ஆனால் சின்னமாடன் குடியிருப்பில் மட்டும் சுடலை ஆண்டவர் ஊருக்கு நடுவில்மிகவும் கம்பீரமாக வீற்றிருக்கிறார். வெளியூர்களில் வசிப் பவர்கள் கூட என்ன வேலை இருந் தாலும் சரி ஆடி கொடை விழாவிற்கு தவறாமல் வந்து சுடலை ஆண்டவரின் அருளை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

0 comments:

Post a Comment